பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் சிறப்பு நேர்காணல் (பகுதி-1)

November 23, 2008

utma-56

இச்சிறப்பு நேர்காணல் ‘தமிழ்வெளி’இணையதளத்திற்காக ’உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’ நிர்வாகிகளில் ஒருவரான திரு.பிரின்ஸ் என் ஆர் எஸ் பெரியார் அவர்கள் மூலம் நடைபெற்றது.

தமிழ்த்தேசியவாதிகளில் சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, பெண்னுரிமை ஆகிய பெரியாரியல் அடிப்படைகளோடு செயல்பட்டு வரும் குறிப்பிடும்படியான தமிழ்த்தேசியவாதிகளில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர். இப்போது திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பையும் தொடங்கியிருக்கிறார். தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர். அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படுகிறார்.

அவரின் சிந்தனைகள்.
தமிழியக்கங்கள் என்பவைகளை நான் திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். திராவிட இயக்கத்தையும், தமிழுணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பதுதான் எங்கள் பணி. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.

எங்கள் அமைப்புக்கு மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. தமிழின, தமிழ் மொழி மேம்பாடு
2. பகுத்தறிவு, சமூகநீதி, பெண்விடுதலை
3. உலகத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்குக் குரல் கொடுப்பது

தமிழீழம் தொடர்பான பல கேள்விகள் இன்றைய தலைமுறைக்கு இருக்கின்றன, மேலும் தமிழீழ பிரச்சினை தொடர்பான சில பொய் பரப்புரைகள் இன்றைய தலைமுறையை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன, எனவே ஈழம் தொடர்பான சில விளக்கங்களை அது சார்ந்த தெளிவுடையவர்களிடம் தமிழ்வெளி தம் வாசகர்களுக்காக தொடர்பு கொண்டு பெற்று வெளியிட முயற்சி எடுத்துள்ளது, பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்வெளிக்காக நேரம் ஒதுக்கி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு விடையளித்ததை நன்றியுடன் வணங்குகிறோம்…

பேராசிரியர் சுப.வீ அவர்களுடன் தமிழ்வெளிக்காக நேர்காணல் நடத்திய நண்பர் பிரின்சு அவர்களுக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனி தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளும் அதற்கு பேராசிரியர் சுப.வீ அவர்களின் பதில்களும்

1. தனி ஈழம் உருவானால் இங்கே தனித்தமிழ்நாடு கேட்பார்களே? இது இந்தியஇறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?

இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு கேள்வி, இப்போது பங்களாதேஷ் என்ற நாடு உருவானவுடன் யாரும் தனி வங்காளம் கேட்கவில்லை, அதாவது இது வேறு கோரிக்கை, அது வேறு கோரிக்கை. திராவிட நாட்டு கோரிக்கை என்பது எப்போதோ இங்கு கைவிடப்பட்ட ஒன்று. எனவே இன்று தனித்தமிழீழத்திற்கும் தனி தமிழ்நாடு என்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இரண்டாவதாக இன்றைக்கு தனித்தமிழீழம் என்பது தலைமுறையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள், அதே போன்று இங்கு எந்த வித போராட்டமு இல்லை, அதனால் தமிழீழம் வந்த உடனே தனி தமிழ்நாடு கேட்பார்கள் என்பது வெறும் பயம் மட்டுமல்ல, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் வதந்தி, எப்படியாவது தமிழீழத்தை தடுத்துவிட வேண்டுமென்று கருதுபவர்கள் அதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அதிலே இதுவும் ஒன்று, இதிலே துளிகூட உண்மையில்லை

2. இந்தியா ஆயுதம் தரவில்லையென்றால் பாக்கிஸ்தானோ, சீனாவோ இலங்கைக்குஆயுதம் தரும் வேறு யாரோ தருவதற்கு இந்தியாவே தரலாமே?

இந்தியா ஆயுதம் தருகிறபோதும் கூடத்தான் பாக்கிஸ்தானும் சீனாவும் ஆயுதம் தந்து கொண்டிருக்கிறார்கள், இன்னொன்று இது இந்தியாவுக்கு நல்லது தானே என்பது கூட அடிப்படையில் வெளியுறவுக்கொள்கையில் உள்ள புரிதலில் தவறானது என்பதை காட்டுகின்றது.

உண்மையை சொல்லப்போனால் இந்தியா தனக்கொரு சரியான நேச நாட்டை அண்டை நாடாக உருவாக்கிகொள்ளவேண்டும் பங்களாதேஷைப்போல ஒரு தமிழீழத்தை உருவாக்கிக்கொள்வதில் தான் அது கவனத்தை செலுத்த வேண்டும், ஆனால் இன்றைக்கு ஈழத்தை தாக்கி சிங்கள இனவெறியர்களுக்கு துணை போவதன் மூலம் மேலும் மேலும் தனக்கு எதிரான ஒரு சூழலைத்தான் இந்தியா உருவாக்கிக்கொண்டுள்ளது.இந்தியா தான் இலங்கைக்கு உதவியிருக்கிறதே தவிர, ஒரு நாளும் ஒரு போது ஸ்ரீலங்கா அரசு ஒரு போரிலும் இந்தியாவிற்கு உதவியாக இருந்ததில்லை, இப்போது அதைக்காட்டிலும் சீனா முத்துமாலை நடவடிக்கையின் அடிப்படையில் இந்தியாவை சுற்றியிருக்கிற இடங்களையெல்லாம் கைப்பற்றிக்கொண்டிருக்கிறது.அதற்காகத்தான் அது இலங்கையையும் கைப்பற்ற முனைகிறது,

ஒரு தமிழீழம் என்கிற நேசம் மிகுந்த ஒரு நாட்டை அண்டை நாடாக உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு வழி. எனவே இந்தியா ஆயுதத்தை சிங்கள அரசுக்கு கொடுப்பதன் மூலம் மேலும் மேலும் அது இந்திய நலனுக்கே எதிரான செயல்களில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

3. அமெரிக்காவின் தலையீடு என்பது இலங்கை அரசுக்கு உதவியாக அமையும் பட்சத்தில் அதுவும் இந்தியாவிற்கு ஆபத்து தானே? பிறகு ஏன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றது?

இந்தியா வெளியுறவுக்கொள்கை தமிழீழத்தை பொறுத்தவரை நீண்ட நெடுங்காலமாகவே பிழையாக உள்ளது, இந்திராகாந்தி இருந்த போதும் திரு பார்த்தசாரதி இந்தியாவின் தூதராக இலங்கையில் இருந்த காலகட்டத்திலும் அது மிகச்சரியாக இருந்தது.பிறகு ராஜீவ்காந்தி தலைமை அமைச்சராக வந்து பார்த்தசாரதிக்கு பதில் ரமேஷ் பண்டாரியை வெளியுறவுச்செயலாளராக நியமித்த அந்த நாளிலிருந்து வெளியுறவுக்கொள்கை தவறுதலான பாதையில் நடை போடத்தொடங்கி இன்று வரை அதே பாதையில் தான் அது தொடர்ந்து நடை போட்டுக்கொண்டுள்ளது, எனவே அமெரிக்காவினோட அங்கிருக்கும் ஆட்களைமைப்பு, சீனாவின் உதவி சீனா இலங்கையோடு தமிழீழத்தையும் வளைத்துப்போட முயற்சித்தல் இவை அணைத்துமே இந்தியாவோட நலனுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. எனவே தமிழீழத்தை ஆதரிப்பது என்ற ஒரே ஒரு கொள்கையினால் தான் இந்தியா தன் நாட்டிற்கான நலனை உருவாக்கிக்கொள்ளமுடியும் மற்ற எல்லா வழியும் இந்தியாவுக்கு எதிரானது.

4. கச்சத்தீவு ஏன் இலங்கைக்கு தரப்பட்டது?

கச்சத்தீவு 1959இலிருந்து அது பற்றிய பேச்சுவார்த்தையை அங்கிருக்கும் இலங்கை அதிபர்கள் தொடங்குகிறார்கள் அது நேருவின் காலத்திலேயே பேசப்படுகிறது. ஆனால் அப்போது அது வலுப்பெறவில்லை. பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்ப திரும்ப அவர்கள் கச்சத்தீவை ஒரு வித வெறியோடு பேசுகிறார்கள், அது இந்திராகாந்தியின் காலத்திலும் கூட தொடக்கத்திலே அது மறுக்கப்படுகின்றது. ஒரு முறை நாடாளுமன்றத்திலே கூட கச்சத்தீவு முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்க்கு கீழாகத்தான் இருந்திருக்கிறது, சேதுபதி அரசரின் ஆளுமையில் தான் இருந்திருக்கிறது, என்று நாடாளுமன்றத்திலே கூட வெளிப்படையாக சொல்லப்பட்டது, ஆனால் அதற்கு பிறகு ஒன் டு ஒன் மீட்டிங் என்று சொல்லப்படுகின்ற இந்திராகாந்தி சீரிமாவோவும் சேர்ந்த ஒருவருக்கொருவர் ஆன அந்த சந்திப்பில் கச்சத்தீவை கொடுப்பது என்ற முடிவு ஏற்படுகின்றது, அது தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றது அப்போது தமிழக அரசு அதை எதிர்க்கிறது, கலைஞர் தலைமையிலான அரசு அதை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மாணம் இயற்றுகிறது.

ஆனால் தமிழக அரசினுடைய அதிகார எல்லை என்ன என்பதை நாம் அறிவோம், அந்த காரணத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் எதிர்ப்பை செலுத்த முடியவில்லை. மேலும் கூடுதலாக அன்றைக்கு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் கூடுதலாக அழுத்தத்தை தரமுடியவில்லை ஆனாலும் கூட அன்றைக்கு கச்சத்தீவை கொடுப்பதை எதிர்க்கத்தான் செய்தார்கள், அதையும் தாண்டி இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டது, அது நமக்கு பெரிய இழப்புதான்கிட்டத்தட்ட

5. இன்றைக்கும் அதே சூழல்தான், திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்றைக்கும் அன்றைக்கும் வேறுபாடு என்ன?

இன்றைக்கு முழுமையாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையிலும் உணர்வுகளை பதிவு செய்யும் வகையிலும் தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்கிறது. மேலும் தொடர்ச்சியான மத்திய அரசோடு ஒரு பேச்சுவார்த்தை என்கிற நிலையில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழக அரசும் திமுகவும் கூட ஒரு கூட்டணியிலே மத்திய அரசில் பங்கு பெற்றிருந்தாலும் கூட இன்றைக்கு ஈழத்திற்கு ஆதரவாக குரல் உயர்த்தி மனித சங்கிலி, மற்ற போராட்டங்கள் போன்றவைகள் எல்லாம் இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இன்னொன்றையும் நாம் எப்போதும் கவனத்திலே கொள்ளவேண்டும் திமுக என்கிற ஒரு கட்சிக்கும் தமிழக அரசுக்கும் இருக்கிற எல்லைகளுடைய அதிகார எல்லைகளுடைய வரம்பு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு கட்சியோ ஒரு தலைவரோ எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. மக்களினுடைய எழுச்சிதான் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும். இன்றைக்கு தமிழகத்திலே தாய் தமிழகத்திலே எழுந்திருக்கிற தமிழீழ ஆதரவு என்பது ஒரு பெரிய நம்பிக்கை கொள்வதாக இருக்கிறது, எனவே இதை வைத்துக்கொண்டு திமுகழகம் வலிமையாக ஆளுங்கட்சியாக இருக்கிற திமுக்ழகம் மத்திய அரசிடம் மறுபடியும் மறுபடியும் இந்த கோரிக்கைகளை எடுத்து செல்லும் என்று நாம் நம்புகிறோம்

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை (உதாரணமாக புலிகளை) ஆதரித்து பேசலாமா?அப்படி பேசினால் இந்திய இறையாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவாய்ப்புள்ளதா?

பெரும்பாலான பிராமணர்களும் தமிழரல்லாத பெரும்பாலான பிற இந்தியர்களும்ஏன் எப்போதும் ஈழப்போராட்டத்தை எதிர்க்கிறார்கள்?

போன்ற தமிழ்வெளி வாசகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து கேள்விக்கு விடையளிக்கிறார் பேராசிரியர்.சுப.வீ அவர்கள், அவைகள் அடுத்த பகுதியில் வெளிவரும்


கல் நெஞ்சும் கரையும்…

November 12, 2008

உங்களுக்குப் பிடித்த இசைப்பாடல் ஒன்று சொல்லுங்களேன்.

– செந்தூரன், அண்ணாநகர், சென்னை-40.

MIDEAST ISRAEL PALESTINIANS

சுப.வீ பதில் : தமிழீழக் கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை அவலத்தைச் சொல்லும், புதுவை இரத்தினதுரையின் பாடல். “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல்/வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” என்று தொடங்கும்,

“ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே
காரிருட்டில் படகெடுத்துப் போவோம் – நேவி
கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்.
பேருமின்றி ஊருமின்றிப் பெற்றவளின் முத்தமின்றி
ஈரவுடல் கரையதுங்கும் காலை – புலி
இந்தநிலை மாற்றிடுவான் நாளை”

என அந்தப் பாடல் தொடரும் போது, கல் நெஞ்சும் கரையும்.



***


மேடைத்துளிகள் – சுப.வீ

November 10, 2008

thamizhar_logo_500

மேடைத்துளிகள் (2008 செப்டம்பரில் சுபவீரபாண்டியன் பல்வேறு ஊர்களில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய உரைகள்)

அண்ணல் அம்பேத்கர் பார்வையில்… உலகம் எப்படித் தோன்றியது, மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பது குறித்து எல்லா மதங்களும் பேசுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் கூறும் கருத்தை இஸ்லாம் உட்படப் பல மதங்கள் ஏற்கின்றன. கடவுள் முதலில் ஆதாம் என்கின்ற ஆணைப் படைத்தார், பிறகு அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாள் என்கின்ற பெண்ணைப் படைத்தார் என்பதே மதங்களின் பார்வை. படைப்புக் கொள்கைக்கு மாறான, பரிணாமக் கொள்கையை எந்த மதமும் எடுத்துரைக்கவில்லை. எடுத்துரைக்கவும் முடியாது. எனினும், முதல் ஆணையும், முதல் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்றுதான் மதங்கள் கூறுகின்றன. ஆனால், உலகிலேயே, நால்வருணங்களாக மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்று இந்துமதம் மட்டுமே கூறுகின்றது.

ambedkar3

இது குறித்த ஆழ்ந்த ஆய்வினை அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்தியுள்ளார். ரிக் வேதத்தின் 10 ஆவது இயலான புருஷசூக்தத்தில் கடவுளின் நெற்றி, தோள், இடை, பாதம் ஆகியனவற்றிலிருந்து பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்கள் தோன்றியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது ‘இடைச்செருகல்’ என்பது அம்பேத்கரின் கருத்து. இருப்பினும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருணம் வருணமாகப் படைக்கப்பட்டனர் என்னும் இந்துமதக் கருத்தியல்தான், இன்றைய சக ஏற்றத்தாழ்வுகளின் அடித்தளம் என்பதை அவர் நிறுவியுள்ளார். இந்த ஏற்றத்தாழ்வை நிறுவுவதே பகவத்கீதையின் நோக்கம் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் காட்டியுள்ளார்.

எனவே, உலகெங்கும் உள்ள ‘தொழில் பிரிவு’, இந்தியாவில் மட்டும் ‘தொழிலாளர் பிரிவு’ என ஆக்கப்பட்டது. அதுவும், வெறும் பிரிவாக அல்லாமல், ஒருவரின் கீழ் ஒருவர் என்னும் வகையில் அடுக்காக ஆக்கப்பட்டது. அந்த அடுக்கு எவ்வாறு இருந்ததெனில், ‘படிப்படியான சமநிலை அற்றதாக’ இருந்தது என்பார் அம்பேத்கர்.

தனி மனிதனைப் படைக்காமல், வருணங்களைப் படைத்த கடவுள் (“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”-பகவத்கீதை ), ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு தொழில் உரியது என்றும் ‘விதித்துவிட்டார்’ என்பதே இந்துமதத் தத்துவம். நான்கு வருணங்கள், நாலாயிரம் சாதிகள் ஆயின. பிறகு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என்றாயிற்று. இன்று வழக்குரைஞர்களாக உள்ள நாங்கள் எல்லோரும் ஒரே சாதியினர் இல்லையே என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். சாதிக்கும், தொழிலுக்குமான பிணைப்பு, நூற்றாண்டுகள் போராடிய பின்பு, இன்று அறுபட்டுள்ளது. அதுவும் கூட, இடைநிலையில் மட்டும்தான் அறுபட்டுள்ளது. மேலும், கீழும் நிலை மாறவில்லை.

கோயில் அர்ச்சகர்களாக, புரோகிதர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் புரட்சித்திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுபோன்றே, பிணம் எரித்தல், பறை அடித்தல், மலம் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் ஆகிய தொழில்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன. சாதியும், தொழிலும் அங்கே அறுபடவில்லை. இப்பிணைப்பின் காரணமாக, சாதி அடிப்படையிலேயே தொழில்களுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. இன்றும், கிராமங்களில் உற்பத்தி ஒழுங்கு முறையில் சாதி ரீதியான முதலீடுகளே உள்ளன. அவை, வர்க்கப் போராட்டத்திற்கு வழிவிடாத தடைச்சுவர்களாக உள்ளன.

தொழிலாளி என்பவன் தொழிலாளியாக மட்டுமில்லாமல், சாதியப் பாகுபாடுகளுக்கு உரியவனாகவும் இருக்கிறான். அதனால்தான், தொழில் வளர்ச்சி பெற்ற இடங்களிலும் கூட, சாதியின் ஆதிக்கம் குறையாமலே இருக்கிறது. ஆகவே, வருண-சாதி அமைப்பை அழித்து ஒழிக்கப் பாடுபடுவதே இன்றைய முதல் தேவையாக உள்ளது.

(23.09.08 – கோவை, வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையிலிருந்து)

***

சலியாத மனமே அழியாத சொத்து

‘கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை’ என்று கவிஞர் சுரதா கூறியதுபோல, இன்றும் அதிகாலை எழுந்து நள்ளிரவு வரை உழைக்கின்ற தலைவர் கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நான்கு கூறுகள் குறித்து இதுவரை கூறினேன். கூர்த்த மதி, கூடுதலான உழைப்பு, நெஞ்சு உரம், நிருவாகத் திறன் எனப்படும் அந்நான்கு கூறுகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அவற்றையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய்ப் படுகின்றது.

‘சலிப்படைவது’ என்னும் குணம், எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானது. சலிக்கும் கால அளவு, ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும் எதன் மீதும் நமக்குச் சலிப்பு வந்தே தீரும். நமக்கு மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பு வந்து விடும். எண்பதுக்கும் மேற்பட்ட போர்க்களங்களைக் கண்ட நெப்போலியனுக்குக் கூட, ஒரு கட்டத்தில் போர் சலித்தது. செயின்ட் ஹெலினா தீவிலிருந்து (சிறை) தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சலிப்பை நாம் பார்க்க முடிகிறது.

அரும்பெரும் தியாகங்களை எல்லாம் செய்து, நாட்டின் விடுதலைக்காய்த் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அரிய தலைவர் வ.உ.சி.க்குக் கூட, இறுதி நாள்களில் அரசியல் சலித்தது, இலக்கியம் நோக்கிச் சென்றார். சிறுகதை மன்னன் என்று அறியப்படும் ஜெயகாந்தன் அண்மையில் எழுதிய சிறுகதை எதையும் காண முடியவில்லை. ஜெயகாந்தனுக்குச் சிறுகதை சலித்திருக்கலாம். ஆனால், 85 வயதான பின்னும், அரசியல் சலிக்கவில்லை, இலக்கியம் சலிக்கவில்லை, சமூகச் சிந்தனை சலிக்கவில்லை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே உண்டென்றால், அவர் கலைஞர்தான்.

இயல்பாகக் குழந்தைகள்தான் எதிலும் சலிப்படையாமல் இருப்பார்கள். ஒரே விளையாட்டைப் பலமுறை திருப்பித் திருப்பி விளையாடுவார்கள். சலிக்காது. வயது ஏற ஏற, சலிப்படையும் மனமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் கலைஞரோ விதிவிலக்காக இருக்கிறார். அரசியலில் ஆயிரம் நெருக்கடிகள், நடக்கவே சிரமப்படும் உடல் என எல்லாச் சிக்கல்களுக்கு மிடையில், நாள்தோறும் அவர் எழுத்திலும், பேச்சிலும் காணப்படும் நக்கல், கேலி நையாண்டிகள் எதைக் காட்டுகின்றன. சலியாத மனம் ஒன்று, அவரிடம் அழியாத சொத்தாக உள்ளது என்பதைத்தானே! அந்த மனம்தான் அவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த குணம், அய்யா பெரியாரிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
(16.09.08 – சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து)

***

பார்ப்பான் என்றால்…

நாகர்கோயிலில், செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டில், கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலையில் நான் கூறிவரும் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். “அவன் ஒரு பேராசிரியனாம், என்ன தெரியும் அவனுக்கு? பார்ப்பான், பார்ப்பான் என்கிறானே, பார்ப்பான் என்றால் என்ன தெரியுமா?

எதையும் சிந்தனை செய்து பார்ப்பான் என்று அர்த்தம்” (அடேயப்பா!) என்று பொருள் சொல்லியுள்ளனர். இன்னொருவர் பேசும்போது, அந்த ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியை உடன் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் பெருமக்கள் பலர் என்னைப் பாராட்டியுள்ளனர். எனினும், அப்போதெல்லாம் ஏற்படாத மகிழ்ச்சி, இப்போதுதான் எனக்கு ஏற்பட்டுள்ளது.

பிராமண சங்கம் இவ்வளவு கடுமையாய் எதிர்க்கிறது என்றால், நம் பணியை நாம் சரியாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதானே பொருள்!
(27.09.08 – சென்னை, முகப்பேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்)

***

இருக்கவே இருக்கிறார்கள் நம் இடதுசாரித் தோழர்கள்

பெரியாரிடம், அண்ணாவிடமும் இருந்த அரசியல் இன்று விஜயகாந்திடமும், வடிவேலிடமும் வந்து சேர்ந்திருக்கிறது. நடிகர்கள் நாடாளக்கூடாது என்பதோ, அவர்கள் அரசியலுக்கே வரக்கூடாது என்பதோ நம் கருத்து அன்று. அது பிற்போக்குத்தனமானது. அனைவரும் அரசியல் தளத்திற்கு வரவேண்டும் என்பதே நம் விருப்பம். ஆனால் விஜயகாந்திற்கும், வடிவேலுவிற்கும் இடையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போட்டி அரசியல் தொடர்பானதா என்பதுதான் நம் கேள்வி. இவர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார், அவர் எதிர்க்கிறாரா அல்லது அவர் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்,

இவர் மறுக்கிறாரா என்பதே நம் கேள்வி. இவர் காரின் கண்ணாடிக் கதவை அவர் உடைத்தார், அவர் வீட்டு சன்னலை இவர் உடைத்தார் என்பதெல்லாம் அரசியலாக முடியுமா? இதை வைத்து அவர்கள் அரசியல் நடத்துவதும், அதை இங்குள்ள ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெருக்குவதும் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்யும்? போகிற போக்கைப் பார்த்தால், வடிவேலுவும் தனிக்கட்சி தொடங்கிவிடுவார் போலிருக்கிறது. அப்படி அவர் கட்சி தொடங்கினால் அவரை யார் ஆதரிப்பார்கள் என்று நாம் கவலைப்படத் தேவையில்லை. அவரோடும் கூட்டணி குறித்துப் பேச நம் இடதுசாரித் தோழர்கள் வராமலா போய்விடுவார்கள்! விஜயகாந்தின் வீட்டில் காத்திருந்த நம் தோழர் வரதராஜன், வடிவேலு வீட்டிற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க மாட்டாரா என்ன?

(20.09.2008 அன்று திருப்பூரில், பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில். )

***

விநாயகர் சதுர்த்தி

மத நம்பிக்கை என்பது வேறு. மத அரசியல், மத வன்முறை என்பன வேறு. பிள்ளையார் சதுர்த்தி என்று ஒரு விழா நெடுங்காலமாகத் தமிழ் மக்களின் வீடுகளில், வீட்டு விழாவாக நடைபெற்று வந்தது. அதுவே மெல்ல மெல்லத் தெருவுக்கு வந்து, இப்போது பல கலவரங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. பிள்ளையார் பக்தி, பிள்ளையார் அரசியலாக உருவெடுத்து, பிள்ளையார் வன்முறைக்கு வழிவிட்டிருக்கிறது. இது தற்செயல் நிகழ்வு அன்று, திட்டமிட்ட சதி.

இப்படித்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்திலும் இப்போதும் இந்துத்துவ குறுக்கீடு நேர்ந்துள்ளது. மத நம்பிக்கை சரியா, தவறா என்பது வேறு. ஆனால் அந்த நம்பிக்கை ஒரு நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் குறுக்கிடுவதை முற்போக்குச் சிந்தனையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வீட்டிலிருக்க முடியாது. அது குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. உணர்ச்சியூட்டப்பட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்ட பொழுது, துள்ளிக்குதித்து எழுந்த நம் மக்கள், அடுத்த தலைமுறைக்கு அரும்பயன் தரக்கூடிய சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு இடையூறு நேர்ந்த நேரத்தில் வாய்மூடி இருந்தது ஏன்? அவர்களிடம் அந்தச் சிந்தனையை, விழிப்புணர்வை நாம் தானே உருவாக்க வேண்டும்.

(3.10.2008 அன்று திருச்சியில் நடைபெற்ற மனித உரிமை உயிர்ப்பியக்கம் கூட்டத்தில்.)