ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!

October 18, 2008

சுப.வீரபாண்டியன் கண்டனம்

jeyalalitha
சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போகும்
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!
சுப.வீரபாண்டியன் கண்டனம்

தமிழீழ மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் விடுதலைப் போராட்டக் கோரிக்கையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகவும் சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது அதற்கு நேர் எதிராகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தன் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிப் பொடாச் சிறையில் தள்ளிய அவர், திடீரென்று தமிழீழ மக்களுக்காகப் பொய் ஒப்பாரி வைத்து ஓலமிட்ட போதே நமக்கு ஐயம் எழுந்தது. இப்போது மீண்டும் தன் கோர முகத்தை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

“இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம், கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்” என்கிறார் ஜெயலலிதா. போரில் செத்து மடியும் ஆயிரக்கணக்கான மக்களும், அகதிகளாய்த் தெருவில் நிற்கும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் அவர் கண்ணில் படவே இல்லை. தமிழினத்தில் பிறந்திருந்தால் அந்தக் கொடுந்துயரம் அவர் நெஞ்சைச் சுட்டிருக்கும். இப்போது அவரிடம் சிங்கள இனவெறிப் பாசமே மேலோங்கி நிற்கிறது.

சில நாட்களுக்குள் இப்படி ஒரு முரண்பட்ட அறிக்கையை அவர் ஏன் வெளியிட நேர்ந்தது? அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற தி.மு.கழகக் கூட்டத்திற்குப் பிறகே, தமிழகமெங்கும் ஒரு புத்தெழுச்சி புறப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தத் தலைவன் குரல் கேட்டுத்தான் தமிழகம் எழுந்தது. அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்த அக்டோபர் 14க்குப் பிறகு, அந்த எழுச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகியது. உலகத் தமிழர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாத ஆற்றாமைதான் இப்படி அறிக்கையாய் வந்து விழுகிறது.

கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்துவதாய் நினைத்துக்கொண்டு, தமிழினத்திற்கு எதிராக அரசியல் நடத்தும் ஜெயலலிதாவை வரலாறும், வருங்காலமும் மன்னிக்காது.

தலாய்லாமாவுக்கு ஒரு நீதி தமிழருக்கு ஒரு நீதியா?

October 14, 2008

சுப.வீரபாண்டியன்

தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் விடுதலை வரலாறு தான், இருபதாம் நூற்றாண்டின் வரலாறு ஆகும். தேசிய இன விடுதலைப் போராட்ட வரலாற்றில், திபெத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. சியாங்கேஷேக் ஆட்சிக் காலத்திலிருந்தே, தலாய்லாமா தலைமையில் திபெத் மக்கள் போராடி வருகின்றனர். திபெத் இன்று வரை, சீனாவின் ஒரு பகுதியாகவே இருக்கின்ற தெனினும், அவர்கள் தங்களைத் தனி நாட்டினராகவே ஓங்கி ஒலிக்கின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற உலக நாடுகள் பலவும் கூட, திபெத் மக்களுக்கும், தலாய்லாமாவிற்கும் மறைமுகமான ஆதரவைப் பல ஆண்டுகளாகக் காட்டி வருகின்றன. இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த வேளையில், அமெரிக்க அதிபராக இருந்த பிராங்ளின் ரூஸ்வெல்ட், தங்களின் நேச நாடுகளுக்குச் சில அதிகாரிகளை அனுப்பி, அரசையும், மக்களையும் சந்தித்து போர் பற்றிய கருத்துகளை அறிந்து வரப் பணித்திருந்தார். சீனாவிற்கு, இலியோ டால்ஸ்டாய், ப்ரூக் டோலன் ஆகிய இரு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அவர்கள் சீன அரசோடும், மக்களோடும் கலந்து உரையாடினர். எனினும், திபெத் பகுதிக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை.

இது குறித்து, சீன அதிபர் சியாங்கே ஷேக் அமெரிக்க அரசுக்கு எழுதும்போது, அப்பகுதிக்குள் நுழைவதற்குத் தலாய்லாமாவைத் தொடர்பு கொள்ளும்படி கூறிவிட்டார்கள். அதன்படி, அதிபர் ரூஸ்வெல்ட், 1942 ஜுலை 3ஆம் நாள், தலாய்லாமாவிற்குத் தனியே ஒரு மடல் எழுதினார். அதன்பின்பே அவர்கள், திபெத் பகுதிக்குள் நுழைய முடிந்தது. இந்நிலை, திபெத்திற்கு அமெரிக்க அரசு அளித்த மறைமுக அங்கீகாரம் என்பதை மறுக்க முடியாது.

புரட்சிக்குப் பின்னர், மாவோ சீன அதிபர் ஆனார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் திபெத்திற்கு மேலும் தங்கள் ஆதரவைக் காட்டினர். அதனை மாவோ விரும்பவில்லை. தங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கவே, மேலை நாடுகள் இவ்விதம் செய்வதாக எண்ணினார். சிக்கல் வளர்ந்துகொண்டே இருந்தது. சீனத்தின் செம்படையை எதிர்கொள்ள இயலாமல், 1959ஆம் ஆண்டு, தலாய்லாமா தன் ஆதரவாளர்கள் சிலருடன் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.

இந்தியா அவரை விருந்தினராக (அகதியாக அன்று) வரவேற்றது. இமாசலப் பிரதேசத்தில், ‘தருமசாலா’ என்னும் இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது. இன்றுவரை தலாய்லாமா அங்குதான் உள்ளார். புலம்பெயர்ந்த அரசாகவே (Government in exile) அது கருதப்படுகிறது. அதன் விளைவாகவே, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் பகை முற்றி, 1960களின் தொடக்கத்தில் அது போராகவும் வெடித்தது.

மாவோ ஆட்சியின் போது இன்னொரு நிகழ்வும் நடந்தேறியது. திபெத்திலிருந்து ஒரு வணிகக் குழுவைத் தலாய்லாமா வெளிநாடுகளுக்கு அனுப்பினார். அவர்கள் கைகளில் வைத்திருந்தது, திபெத்திய கடவுச்சீட்டு (Tibetian Passport). திபெத் என்று ஒரு நாடு இன்றுவரை உருவாகவில்லை. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கடவுச் சீட்டை வழங்கினர். அவர்கள் அப்படி வழங்கியது கூட தவறு இல்லை. அதனைப் பிரிட்டன் அரசு ஏற்றுக்கொண்டதே, அதுதான் வியப்பு. அப்போது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஆங்காங் நாட்டிற்கு, அந்தக் குழு பயணப்பட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் அதனை ஏற்று, மூன்று மாத கால அனுமதியும் (விசா) கொடுத்தனர்.

1998ஆம் ஆண்டு தலாய்லாமா ஒரு பேட்டியில், ஆண்டுதோறும் அமெரிக்கா பல ஆயிரம் டாலர்களைத் தருமசாலாவில் உள்ள அவர்களின் அலுவலகத்திற்குக் கொடுத்து உதவி வருவதாகக் கூறியுள்ளார். ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு உலக நாடுகள் உதவுவதில் நமக்கு ஒன்றும் வருத்தமில்லை, மகிழ்ச்சியே. ஆனால், இந்தப் போக்கை தமிழ்ஈழ மக்களின் போராட்டத்தில் மட்டும் காட்ட மறுப்பது ஏன் என்ற கேள்விதான் நம் நெஞ்சை அறுக்கிறது.

இலங்கையின் முழுஅரசுரிமை (இறையாண்மை)யும், ஒருமைப்பாடும் சிதைந்துவிடக் கூடாது என்று கவலைப்படும் உலக நாடுகள், சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்து ஏன் கவலைப்படவில்லை? தலாய்லாமாவிற்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதி என்பது சரிதானா?

தலாய்லாமாவிற்கு ரூஸ்வெல்ட் எழுதிய மடலில், இரண்டாம் உலகப் போரில், தங்கள் கோட்பாட்டில் நியாயமும், திறமையில் நிறைவும், உறுதியில் அசைவின்மையும் இருப்பதால் வெற்றி நிச்சயம் (“We shall be victorious because our cause is just, our capacity is adequate and our determination is unshakable”) என்று எழுதியுள்ளார். இந்தக் கூற்று அமெரிக்கர்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா? போராடும் ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தாதா? தமிழீழ மக்களின் கோட்பாடும் நியாயமானது, அவர்களின் திறமை போதுமானது, உறுதி குலைக்கப்பட முடியாதது. எனவே, அவர்களின் வெற்றியும் நிச்சயம் என்பதை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும்.

நன்றி – மக்கள் களம்


கனவு….காதல்….கொஞ்சம் கடமை! – 2

October 14, 2008
2

தான் ஒரு கட்சியின் ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்னும் எண்ணம் மாணவர்களிடம் எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு அரசியலில் நேரடித் தொடர்பு உள்ளது. ‘வெள்ளையனே வெளியேறு’ என்பது மாணவர்களிடமிருந்தும் வெளிப்பட்ட முழக்கம்தான். அண்ணல் காந்தியடிகளே, மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மாணவர்களை அரசியலுக்கு அழைக்கலாமா என்ற விவாதம் அப்போதே எழுந்தது. படிக்கும் காலத்தில் படிப்புத்தான் முக்கியம் என்றாலும், நம் வீட்டு வயலில் ஒரு மாடு புகுந்து பயிர்களை எல்லாம் அழிக்கும்போது, அந்த மாட்டை விரட்ட வேண்டிய கடமை மாணவன் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டுதானே என்று விடையிறுக்கப்பட்டது. மாட்டை விரட்ட வேண்டிய உடனடி வேலைக்காகப் படிப்பைச் சற்று ஒத்தி வைப்பதில் பிழையில்லை என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருந்தது. அந்த அடிப்படையில் அரசியலில் மாணவர்களின் பங்கேற்பு அன்று வரவேற்கப்பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பின்பும், அரசியலில் மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கவே செய்தனர்.
தி.மு.கழகம் தொடங்கப்பெற்றபோது (1949), அண்ணாவைத் தவிர முதல்வரிசைத் தலைவர்கள் பலர் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர். அதனால் தி.மு.க. என்பதே, ஓர் இளைஞர் அணி போலத்தான் தோற்றமளித்தது. அண்ணா கூட, மாணவர்களை அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. ”அரசியலை அறிந்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவர்கள் அதில் ஈடுபட வேண்டியதில்லை” என்றே அவர் கூறினார். ஆனால் அதனையும் மீறி அன்றைய மாணவர்கள் அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர்.
விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட மாபெரும் போராட்டம் அதுதான். தமிழகத்தின் தெருக்கள் தீப்பிடித்துக் கொண்டன. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்னும் முழக்கம் வானைப் பிளந்தது. கலவரமும், அடிதடியும், துப்பாக்கிச் சூடுமாய், அந்த இரத்தம் தோய்ந்த ஐம்பது நாள்கள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாயின.
தமிழகத்திலாவது மாணவர்கள் போராடியதோடு நின்று கொண்டனர். ஆனால் 1970களில், அசாம் மாணவர்கள் போராடி, மக்கள் சக்தியாய்த் திரண்டெழுந்து ஆட்சிக் கட்டிலிலேயே அமர்ந்து காட்டினர்.
இப்படிப் பல செய்திகள் நம்மிடம் உள்ளன. எனினும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைஞர்கள் அரசியலிலிருந்து அந்நியப்பட்டு நிற்கத் தொடங்கினர். அரசியல் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் ஒருவிதமான அருவெறுப்பு வளரத் தொடங்கியது.
1960லிகளில் தமிழக அரசியலையே மாணவர்கள்தாம் தீர்மானித்தார்கள் என்பது மிகையில்லை. சென்னை பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை பயின்ற மாணவர்களும் 1965ஆம் ஆண்டு நேரடியாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த விபத்து என் தலைமுறையின் இளமைக் காலத்தில்தான் துளிர் விடத் தொடங்கியது. இன்று அது வளர்ந்து மரமாய் ஆகியுள்ளது.
1970களின் நடுப்பகுதியில், ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே அறிவியல் பயிலும் மாணவர்கள் என்றும், கலையியல் பயிலும் மாணவர்கள் என்றும் இருவேறு பிரிவுகள், இருவேறு ‘சாதிகளைப்’ போல வளரத் தொடங்கின.

பொதுவாகவே, பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் அறிவியல் படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் நோக்கியும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இலக்கியம், வரலாறு, பொருளியல் முதலான படிப்புகளை நோக்கியும் பிரிந்தனர். எனவே, அறிவியல் படிப்பு, நாளை உலகை மாற்றப்போகும் ‘மேல் ஜாதியாகவும்’, கலைப் படிப்பு, உலக வாழ்க்கைக்கு உதவாத ‘கீழ்ச் சாதியாகவும்’ கருதப்பட்டது.
குறிப்பாக, வரலாற்றுப் பாடத்தைக் கேலி செய்யும் தன்மை பரவலாக எழுந்தது. ‘அசோகன் சத்திரம் கட்டினான், சாவடி கட்டினான், வீதிகளில் மரம் நட்டான்’ என்பதையெல்லாம் படிப்பதால் இப்போது என்ன பயன்? என்ற எண்ணம் எழுந்தது.
அவ்வாறே, தமிழ் இலக்கியம் என்றாலே, ‘என்னப்பா, தலைவன்லிதலைவி, அகநானூறு, புறநானூறு, ஒன்றுக்கும் பயன்படாத படிப்பு’ என்ற கேலி எழுந்தது.
தமிழ் திரைப்படங்களில் கூட அந்தத் தாக்கம் இருந்தது. மற்ற ஆசிரியர்களெல்லாம் இயல்பாக இருக்க, தமிழாசிரியர் மட்டும் ஒரு கோமாளி போலவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இதுபோன்ற போக்குகள், அறிவியல் மாணவர்களிடம் ஒரு பெருமித உணர்ச்சியையும், வரலாறு, இலக்கியம் பயிலும் மாணவர்களிடையே ஒரு தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கியது.
ஆசிரியர்கள் சிலரும் இதற்குக் காரணமாயிருந்தனர். ”ஏம்பா, நீங்க எல்லாம் சயின்ஸ் ஸ்டூடன்ஸ் இல்லையா, அவனுங்க கூட சேர்ந்துகிட்டு ஸ்டிரைக் பண்றீங்களே… நாளைக்கு இன்டர்னல் மார்க்லே சுழிச்சோம்னா என்ன ஆவிங்க?” என்று அறிவியல் துறை ஆசிரியர்கள் சிலர் பேசுவதை நானே கேட்டிருக்கிறேன்.
வேலை நிறுத்தம் செய்வதெல்லாம், அரசியல்வாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டவை. சரியாகப் படிப்புவராத ‘பி.ஏ.’ பயிலும் மாணவர்கள்தான் அவற்றில் ஈடுபடுவார்கள். ‘பி.எஸ்ஸி’ மாணவர்களுக்கு அதெல்லாம் உதவாது என்ற கருத்துப் பரவியது.
பிறகு இன்னொரு மாதிரியான பிரிவும் ஏற்பட்டது, அல்லது எற்படுத்தப்பட்டது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்படிப்புப் பயிலும் வேறு, கலை அறிவியல் பயிலும் கலைக்கல்லூரி மாணவர்கள் வேறு என்ற எண்ணம் எழுந்தது. தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று, கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் போடும் நிலையும் எழுந்தது.
இவ்வாறு, கல்வி நிலையங்களுக்குள் வர்க்கங்களும், சாதிகளும் உருவாயின. மேல்தட்டினர் என்ற கருத்துருவாக்கத்திற்கு உள்ளானவர்கள், அரசியலின் பக்கம் போவது நாகரிகக் குறைவானது என்று எண்ணத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் அடுத்த கட்ட பரிணாமும் உருவானது. 1980களின் இறுதியில், பள்ளிகளிலும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று புதுவகைப் பள்ளிகள் தோன்றின. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவிபெறும் பள்ளிகளையும் விட இங்கு பாடங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். அத்தோடு மட்டுமில்லாமல், அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக, அதுவும் விருப்பப் பாடமாக மட்டும் படித்தால் போதுமானது.
இச்சூழலின் மாற்றம், மாணவர்களை மேலும் இரு கூறாக்கியது. ஆங்கில வழியில் பயிலும், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மாணவர்கள் அறிவாளர்கள் எனவும், தமிழ்வழிப் பயில்வோர் பாமரர்கள் எனவும் ஒரு கருத்து உருப்பெற்றது.
பள்ளி, கல்லூரிகளின் படிப்பு நல்ல வேலை பெறுவதற்காகவும், அதன் மூலம் நல்ல ஊதியம் பெறுவதற்காகவும்தான் என்று முடிவே ஆகிவிட்டது. வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், எந்த ஒரு சமூகச் சிக்கல் குறித்தும் கவலை கொள்ளாமல், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று இருக்கும் மாணவர்களே நல்ல மாணவர்கள் என்ற கற்பிதம் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.
இப்படித்தான் கல்வியும், சமூகமும் ஒன்றுக்கொன்று அந்நியமாய்ப் போயின. சமூகப் பண்பையும், பொதுநல எண்ணத்தையும் வளர்க்க வேண்டிய கல்வி, சுய முன்னேற்றம் ஒன்றே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிட்டது.
அதன் விளைவாக, அரசியலற்ற படிப்பாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது… செல்கிறது. இதனைத் தனிமனிதர்களின் குறைபாடு என்று நான் கூற வரவில்லை. இது ஒரு சமூகக் குறைபாடே.
இக்குறைபாட்டில் இன்றைய தலைமுறை சிக்கித் தவிப்பதற்கு, நேற்றைய தலைமுறைதான் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. சரி, சென்ற தலைமுறை ஏன் அந்தக் குறைபாட்டிற்குக் காரணம் ஆயிற்று!

கனவு….காதல்….கொஞ்சம் கடமை! – 1

October 14, 2008

1

மாலையும் இரவும் சந்திக்கும் அந்திப் பொழுதைப் போல, இளமையும் முதுமையும் சந்திக்கும் நடுவயதில் நிற்பவன் நான்.

எனக்கு முன்னால் ஒரு தலைமுறையும், பின்னால் ஒரு தலைமுறையும் துல்லியமாய் என் கண்களுக்குத் தெரிகின்றன.

என் மூத்த தலைமுறையிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகளும் உண்டு; மாற்றிக் கொண்டவைகளும் உண்டு. என் இளைய தலைமுறைக்கு நான் கற்பிக்க வேண்டியவைகளும் உண்டு; அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டியவைகளும் உண்டு.

அவர்களின் ‘இன்று’ என் ‘நேற்றை’ப்போல் இல்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இப்போது ‘மிக மிக விரைந்து’ மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய செய்தி.
முன்பு 50, 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம், இப்போது 5, 10 ஆண்டுகளிலேயே ஏற்பட்டுவிடுகிறது. நழுவி விழுந்த தன் மேலாடையை அரசன் திரும்பிப் பார்ப்பதற்குள், அவன் ரதம் பல மைல்களை கடந்துவிட்டது என்று இலக்கியம் சொல்வதைப்போல, இன்றைய உலகம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.
என் 15, 16 ஆவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் அப்படியே நினைவில் உள்ளது. தேனி, கம்பம் பகுதியைத் தாண்டிப் பெரியாறு அணையிலிருந்து, இறந்துபோன என் அக்கா இந்திராவிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அன்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அஞ்சலகத்திலிருந்து ஒருவர் வீட்டுக்கு வந்து, பெரியாறிலிருந்து ‘டிரங்க் கால்’ வந்துள்ளதாகச் சொன்ன அந்த நிமிடம், என் அம்மா பதறிப்போனார். தந்தியை விட அவசரம் என்றால்தான், அப்போது வெளியூர்த் தொலைபேசி.

அப்பா ஊரில் இல்லை. என்னை அழைத்துக்கொண்டு அம்மா அஞ்சலகத்திற்கு ஓடினார். அங்கே சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. ‘மதுரைக்கு லைன் கிடைச்சுருச்சு. அங்கேயிருந்து கம்பத்துக்குக் கிடைக்கலை. கம்பமும் கிடைச்சாச்சு. கூடலூர் கிடைக்கலை’ என்று அஞ்சலக அலுவலர் சொல்லிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ‘ஏதோ, என்ன

வோ’ என்று எண்ணி என் அம்மா அழுது கொண்டிருந்தார். கடைசியில் அது ஏதோ ஒரு நல்ல செய்தியாகத்தான் இருந்தது என்று நினைவு.

இப்போது உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதரோடும், சில நொடிகளில் நம்மால் தொடர்பு கொள்ள முடிகிறது. ஓர் ஊரில் சில செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்த நிலை மாறி, இன்று நம் வீடுகளில் எந்தத் தொலைபேசி அடிக்கிறது என்ற தடுமாற்றம்தான் நம்முடைய குழப்பமாக உள்ளது.

உலகைப் போலவே, நம் தமிழகமும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அம்மாற்றத்திற்கு அடிப்படையாக மூன்று புதிய வரவுகளை நம்மால் அடையாளம் காணமுடியும்.

1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அறிமுகமான அரசுத் தொலைக்காட்சியும், அதன் விரிவாக 1990களில் தொடங்கிய தனியார் தொலைக்காட்சிகளும் முதல் காரணம்.

1980களின் நடுவில் தொடங்கி, 1990 முதல் சூடு பிடித்த கணிப்பொறிகள் இரண்டாவது காரணம்.

2002லி03இல் எல்லோருடைய கைகளுக்கும் வந்து சேர்ந்த கைத்தொலைபேசிகள் (செல்போன்) மூன்றாவது காரணம்.

மூன்று காரணங்களும் சேர்ந்து, இளைய தலைமுறையின் முகத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டன.

இவை அறிவியல் வளர்ச்சி, வாழ்வியல் முன்னேற்றம். வாழ்க்கைச் சுழல் ஏணியை நம்மால் மறுதலிக்க முடியாது. மறுதலிக்கவும் கூடாது. வரலாற்றுப் புதுமைகளை மறுத்துவிட்டு, மரபு, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் மறுபடியும் குகைக்குத் திரும்பச் சொல்லும் பழைமைவாதிகளை உலகம் ஒருநாளும் ஏற்றுக்கொள்வதில்லை.

அதே நேரத்தில், மரபையும், பண்பாட்டையும் எல்லாப் புதுமைகளுக்கும் எதிரானவை என்றும் கருத வேண்டியதில்லை.

கலை, இலக்கியங்களிலும் காலத்தை வென்று நிற்பவை ஏராளம். அவற்றையெல்லாம் புதுமை என்ற பெயரில் புறக்கணித்து விடக் கூடாது.

இன்றைய இளைஞர்கள் கணிப்பொறியியலில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வல்லரசு நாடுகள்கூட, இந்தத் துறையில் தமிழக இளைஞர்களைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்நிலை நமக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறது.

ஆனால் அதே இளைஞர்கள், தாம் பிறந்த மண்ணின் வரலாற்றையும், சமூகநீதிப் போராட்டங்களையும், இலக்கியச் செல்வங்களையும் அறியாமல் நிற்பது வேதனைக்குரியதல்லவா?

சங்ககால இலக்கியங்களை அல்ல, இன்று வெளிவரும் கவிதைகள், நாவல்களைக் கூட எத்தனை இளைஞர்கள் படிக்கின்றனர்? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம் பற்றியன்று, இன்றைய சமூகச் சூழலைக் கூட எத்தனை இளைஞர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுக்கின்றனர்? ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம், சேதுக் கால்வாய்த் திட்டம், சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, அணுசக்தி உடன்பாடு போன்ற நடப்புச் செய்திகளின் விவரங்களைத் தம் விரல் நுனிகளில் வைத்திருக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்?

அத்தகைய இளைஞர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவே என்பதனை நாம் அறிவோம். என்ன காரணம்?

இளைஞர்களிடம் கேட்டால் இரண்டு விடைகள் வருகின்றன. எல்லாவற்றையும் படித்து அறிய நேரமில்லை என்பது ஒன்று. இவைகளையெல்லாம் தெரிந்துகொள்வதால் என்ன பயன், இன்றைய வாழ்க்கைக்கு எதுவும் உதவாது என்பது இன்னொன்று.

இரண்டு விடைகளுமே மேலோட்டமானவை. நம்மைச் சுற்றி நிகழும் வாழ்க்கைப் போக்குகளில் அக்கறை காட்டமால், நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று இருக்கும் அலட்சியத் தன்மைதான் அடிப்படைக் காரணம். அரசியல்வாதிகளின் மீது பொதுவாகவே மக்கள் மூளைகளில் படர்ந்து கிடக்கும் வெறுப்பு இன்னொரு காரணம்.

அமெரிக்காவின் பில்கேட்ஸும், அம்பானியும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று கருதும் இளைஞர்கள், கருணாநிதி பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ அப்படிக் கருதுவதில்லை. ஏதோ கட்சி நடத்தி, மேடையில் பேசி வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணுகின்றனர்.

தான் ஒரு கட்சிக்கு ஆதரவாளன் என்பதெல்லாம் தரக்குறைவானது என்றும், படிப்பாளிகளுக்கு அது உரிய இடம் இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இப்படி அரசியலற்ற, சமூக அக்கறையற்ற ஓர் அணியை உருவாக்கியிருப்பதில் ஊடகங்களுக்கும் கூட ஓர் இடம் உண்டு.

துடைத்தெறியப்பட வேண்டிய இந்தச் சிந்தனை குறித்து, என் அடுத்த தலைமுறையோடு உரையாட நான் ஆவல் கொண்டேன்.

உங்கள் கனவு, காதல், ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் எதிலும் நான் குறுக்கிடவில்லை. இளமைக்கேற்ற துள்ளல் என்பது எனக்கு ஏற்புடையதே. ஆனால், சமூகம் பற்றிய பார்வையும், அக்கறையும் நமக்குக் கொஞ்சமாவது வேண்டாமா? கனவுகளில் மிதந்து கடமைகளை மறப்பது நியாயம்தானா?

ஒரு மாலை நேரம், தேநீர்க் குவளையோடு அமர்ந்து, பலவற்றையும் பேசும் நண்பர்களைப்போல, என் இளைய தலைமுறையே உங்களோடு பேச விரும்புகிறேன். வருவீர்களா?

தொடரும்……..


மாவீரர் நாள் உரை – லண்டன்

October 10, 2008

மாவீரர் நாள் – திரு- சுப.வீ நிகழ்த்திய உரை – பகுதி-1.


மாவீரர் நாள் – திரு- சுப.வீ நிகழ்த்திய உரை – பகுதி-2.


மாவீரர் நாள் – திரு- சுப.வீ நிகழ்த்திய உரை – பகுதி-3.


மாவீரர் நாள் – திரு- சுப.வீ நிகழ்த்திய உரை – பகுதி-4.